உறவுகளுக்கு அதிசயாவின் அன்பு வணக்கங்கள்.
நலம் தானே....?சில நாட்கள் இடைவெளியின் பின்பு மீண்டும் ஓர் அனுபவப்பகிர்வோடு சொந்தங்களின் விழிகளைக்கடப்பது மிகவே மகிழ்வு.
இந்தப்பதிவு உணர்வு நிலை நிற்பதா அறிவுவழி சார்ந்ததா என்ற வினா எனக்கு சற்று தடுமாற்றத்தை உண்டுபண்ணிய போதும்,உணர்வுகளால் குமைந்து குமைந்து அறிவால் நிறைந்த முடிவு என்பதே உண்மை.
"நண்பர்கள் இருந்தால் நரகத்திலும் வாழப்பிடிக்கும்"
-வைரமுத்து-
இது தான் நட்பின் அடர்த்தி. நரகத்தின் நெருப்பு கூட நட்பின் நெருக்கத்தில் நிறைவாகிப்போகின்றது.பொதுவாக எடுத்த எடுப்பில் ஒருவரை நண்பர் என்று வரித்துக்கொள்வதிலும் பார்க்க,சில கால அவகாசங்களின் பின்பு ஒரு நபரை நண்பன் என்று மேற்கோளிடுவதே சாலச்சிறந்தது.
இங்கு பேசப்படவுள்ள ஆண்-பெண் நட்பு பற்றிய விடயங்கள் வித்யாசமானது.விபரீதமானதும் கூட.இத்தகைய நண்பர்களின் தெரிவானது ஒத்த விருப்பு வெறுப்புகள்,ஏகமான ரசனைத்தன்மைகள்,கலப்படமற்ற பாசம் இவற்றின் விளைவால் உயிர்கொள்கிறது.இவ்வாறு மனம் விரும்பி சுயாதீனத்தன்மைகளின் சுதந்திரத்தில் நாம் உருவாக்கிக் கொண்ட நட்புப்பந்தத்திடம் முழுதாய் வெளிப்படையாய் இருப்போம்,எங்கள் தவிப்புகளில் அவர்கள் தலை தடவுவதும் அவர்கள்வெற்றிகளில் நாம் சிலிர்ப்பதுமாய் இந்த உறவுநிலை தணிக்கை அற்றதாக விரிந்து செல்லும்.நாளாக நாளாக அந்த நட்பின் மீதான நேசமும் நெருக்கமும் பிரவாகமாகி,எம் நாட்களில் அவர்களை தவிர்கமுடியாதவர்கள் ஆக்கிப்போகிற அளவிற்கு இறுக்கி இறுக்கி நெருக்கும் அந்த நட்பின் பொழுதுகள்.
இது போன்றதான நேசங்களின் தொடர்ச்சி நாளடைவில் இனம் புரியாத ஒரு அதீத ஈடுபாட்டை நம் நண்பனிம் அல்லது நணபியிடம் ஏற்படுத்தும்.கால் கட்டும் கணங்கள் வரை இந்த நேசம் வேண்டும் என்று மனது அடம்பிடிக்க ஆரம்பிக்கும்.இரவுகளிலும் கனவுகளிலும் மெல்ல அந்த முகம் மிதக்கத்தொடங்கும்.மிதந்து மிதந்து மேலெழுந்த அந்த முகம் தனியே பேச வைக்கும்,சிரிக்க வைக்கும்.சில சமயங்களில் புலம்பவும் வைக்கும்.இது காதல் தான் என உணர்வுகளெல்லாம் ஒருமித்து சத்தமாய் கூறிப்போகும்.ஏதோ பலமான ஒரு அங்கீகாரம் கிடைக்கப்போவதாய் ஓமோன்கள் அறிவிப்புப்பலகை நட்டுப்போகும்.
அத்தனை மாற்றங்களையும் பல சமயங்களில் நாம் இயல்பாகவே நம் நட்புத்துணையிடம் வெளிப்படுத்தி விடுவோம்.சில சமயங்களில் நாம் மனம் திறப்பதற்கு முன்பே நம்மிடமான ஏதோ மாற்றத்தை நண்பன் அறிந்து விடுவான்.இவ்வாறு வெளிப்படுத்திய எத்தனையோ காதல்கள் பின்னாளில் கைகூடியது மகிழ்வே.இருப்பினும் நட்புச்சாலைகள் தொடராது முறிந்து போகவும் பல சமயங்களில் திருப்தியீனமானஓர் உறவு நிலையாக "ஈனவும் முடியாத நக்கவும் முடியாத "இக்கட்டிற்குள் நம்மை மாட்டி விடவும் காரணமாகின்றன.
தடுமாறித் தத்தளிக்கும் சமயங்களில் கிடைக்கும் தலை தடவுதல்கள் அற்புதமான சுகத்தை,தாய்மையின் மற்றெதரு பரிமாணத்தை தருவது உண்மை.அத்தகைய இதமான ஆற்றுப்படுத்தல்கள்,பரிபூரண நம்பிக்கைகள்,சில தனிமைச்சந்திப்புக்கள்,சுகமான நடைப்பயணங்கள்,உணர்வுமயமான பரிமாற்றங்கள்,நெருக்கமான தொடுகைகள் இவை தான் நட்பெனும் சாலையிலிருந்து அரவமேதுமின்றி காதல் என்னும் தேசம் ஒன்றில் நம்மை பிரசவித்துப்போகின்றன்.love you சொலுமளவிற்கு நெருக்கமான சில நண்பர்களை கண்டதுண்டு.ஆனால் அந்த வார்த்தைகளில் விரசம் இருக்கவில்லை.உணர்வுக்குழப்பம் தெரியவில்லை.அத்தனையும் தெளிவான நட்பாக மட்டுமே அது இருந்தது.இது தான் முதிர்ச்சி நட்பு.இது கிட்டினால் பெரும் பாக்கியமே..!
என்னிடம் கேட்டால் சொல்வேன் நட்பு காதலாகுவது குற்றமல்ல(இது என் கருத்து மட்டுமே)நட்பிற்குள் காதலை ஒளிப்பது தான் குற்றம்.இயல்பு நிலை ஒற்றுமையால் ஏற்படுகின்ற இக்காதல் உணர்வு வயதுகளை வென்று,பருவங்கனை தாண்டியும் நரையோடும் நலிவோடும் நிலைக்குமளவிற்கு பரிசுத்தமானது எனில் உங்கள் தெரிவு சரியானதே.நல்ல நண்பனால் நிச்சயமான நிறைவான துணையாக மாற முடியம்.
ஆனால் காதல் என்ற, உணர்வு நிலை மாறுதல்கள் வந்த பின்பும் நட்பு என்ற போர்வைக்குள் தம்மை உருமறைப்பு செய்வது அருவருக்கத்தக்க நடத்தைக்கோலம்.மூடி மூடி வைத்தாலும் ஒரு நாள் மூச்சு முட்டி விஸ்பருபமாகும்.அதுவே பல சமயங்களில் உறவுகள் உடைந்து போக காரணமாகின்றன.
"அறிவும் உணர்வும் ஆயுதமெடுக்கும்
அறிவில் வென்றால் ஆயுதமாவாய்"
அறிவுநிலை நின்று தீர்மானியுங்கள்.பல நண்பர்களை பார்த்ததுண்டு,சில சமயங்களில் நண்பர்களாய் பல சமயங்களில் காதலர்களாய்.இவர்களுக்கே தெரிவதில்லை..பாவம் தாம் எந்த கட்சி என்று.
எங்கோ பார்த்தாய் சில வரிகள் நினைவில் வருகின்றன...
"நட்பு எனும் ஊஞ்சலில் தான் நாம் ஆடிக்கொண்டிருந்தோம்
காதல் எனும் காற்று தான் அதை ஆட்டுகிறது என்று தெரியாமல்..."
இது தான் பிரச்சனை.நம்மைப்பற்றியதான நமக்குண்டான குழப்ப நிலை.உயிரில் விழும் முடிச்சுகளை அவிழ்குமளவிற்கு உறுதியானது நட்பு.அதே நட்பு காதலாகிறா???ஆராயுங்கள்.சுயாதீகமாய் முடிவெடுங்கள்.நண்பர் என்ற போர்வைக்குள் உங்களை மறைத்து காதல் உணர்வை வளர்தால் பின்னாளில் உங்களால் கூட சரிசெa;a முடியாத தன்னிலை வெறுப்பிற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக நேரிடும்.உணர்வு நிலை மாறுதல்கள் ஒருவரிடம் மட்டுமே கருக்கொண்டால் வலிந்து அதை உங்கள் துணையிடம் திணிக்காதீர்கள்.இதுவாழ்க்கை,வியாபாரமல்ல!
இது தான் சாலை என தீர்கமாய் பயணப்படுவோம்.திரும்பும் போது பார்ப்போம் என்ற அலட்சியம் வேண்டாம்.நட்பின் கரங்களை வலுவாகப்பற்றுவோம்.நிச்சயம் நரகங்கள் கூட நேசமாய் மாறும்.
வழுக்கல்சாலைகள் பாதங்களை தடுமாற்றும்.பிடிப்பாய் நடப்போம்.கால் கட்டும் நேரம் வரை இந்த நெருக்கங்கள் தொடரும்.
நேசங்களுடன்'
-அதிசயா-