Thursday, November 14, 2013

மற்றொரு மழைக்கொத்து!!!


சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்.

கார்காலத்தில் கதவருகிலே நின்றபடி தேநீர் கதகதப்புடன் இப்பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.மனதிற்கு மிகவே ரம்மியமான ஒரு நினைவோட்டம் இது.மிகவே அனுபவித்து என்னுள் மெய்சிலிர்த்து இப்பிரபஞ்சதின் மதுரஅருவியொன்றின் மடியமர்ந்திருப்பதாய் தான் உணர்கிறேன்.
ஆம் சொந்தங்களே கார்காலத்தின் பரவசம் உண்டாக்கும் ஒரு சொட்டு தேநீர் போல மழைகாலத்தின் நீண்ட வழிப்பணயங்களும பேரானந்தமானவை.அதிசொகுசுப்பயணயங்களில் மட்டுமல்ல சாதாரணமாக வாய்க்கின்ற கீழ்தட்டுப்பயணங்களை கூட இந்த பரவசங்கள் சந்திப்பதை மறுப்பதற்கில்லை.

  
 இயல்பாகவே கேசம் கலைக்கும் ஈரக்காற்று என்றோ முத்தம் பெற்ற நெற்றிப்பொட்டை கடந்து போகையில் அந்தப்பொழுதின் அத்தனை சிருங்;காரங்களையும் நெஞ்சுக்கூட்டில் நிறைத்துப்போகும்.சிலிர்த்ததேகம் நேசக்கதகதப்பால் நிமிர்ந்து கொள்ளும்.தங்தையின் நெஞ்சுள் புதைந்திருக்கும் குழந்தையாய் இதமாய் உணரும் இடைவெளிகளில்  ஜன்னலோரத்தின' ஈர உலகம் ஆயிரம் கதை சொல்லும்.கம்பி ஒன்றின் மையம் பற்றி ஊஞ்சலாடும் நீர்க்குமிழியில் பிரபஞ்சத்தின் வேதங்களும் ஞானங்களும் திருப்தியான வீதத்தல் நிறைந்திருக்கும்.புலன்கள்,நரம்புகள் தேகமெல்லாம் பரந்திருந்தாலும் ஆன்மாக்குள்ளே மட்டும் கொலுவிருக்கும் உயிரின் கனவுகள் போல பெரியதொரு தேசத்தை தன்னுள் நிறைத்து இதுதான் உலகம் என அன்பாய் சொல்லும்.

 மழையில் நனைந்தபடி வயலின் இசைக்கும் பெண்ணொருத்தியை போல இப்போது கண்மூடி அசைந்து கொடுக்கிறேன் இந்த மழைத்தாளங்களுக்கு!கேசங்களால் வழிந்து வயலின் நரம்புகளில் தெறிக்கும் நீர்க்கோலங்கள் போல மனதோடு கோலம்போடுகிறது இந்த அனுபவங்கள்.
குடைகளை வீசிவிட்டு ஆகாயம் நோக்கி கைகளை அகலவிரித்து மழைநடனம் ஆடுகிறேன்.மிக்சாரக்கம்பிகளில் சமநிலைகொள்ளும் காகங்கள்,வெளியூர் தந்தைக்காய் கலர்கலாரய்  கப்பல்அனுப்பும் குழந்தை,இதோ இன்னும் நெஞ்சுவிட்டகலாத அந்த ஜோடிகளின் மிகவே நெருக்கமான இதழ்முத்தங்கள்,பிரிந்து சென்ற காதலொந்றிற்காய் தனியே அழுதுகொண்டிருக்கும் தெருவோர இருக்கை,விழுதுகளுக்கு பூக்கள் ஊற்றும் நேசத்தீர்த்தங்கள் இப்படியாய் ஆயிரமாயிரம் இன்ப நிழற்படங்கள்.இன்பங்கள் மட்டும் தான் பதிவானது என்றில்லை.துன்பியலை தணிக்கைசெய்து பதிவிடுகிறேன். தெருமுனையில் தேநீர்க்கடை மறைவில் சுருள் சுருளாய் புகைவிடும் விடலைகளின் அவசரம் கலந்த அந்தஅனுபவிப்பு கூட இதழோர  புன்னகையை சுண்டி விடுகிறது.
பேருந்து சீராய் நகர்கிறது.காட்சிப்புலங்களும் அதன் பால் நினைவுகளும் சீரின்றி ஆர்முடுகலாய் அமர்முடுகலாய் இந்த பயணத்தில் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

''அன்றொரு மழை பயணத்தில் உன் மார்போடு சரிந்திருந்தேன் என் அன்பே!!!அது சுகம்! அதே மழை, அதே பாடல் அதே இருக்கை.ஆனால்  மரித்திருக்கிறேன் உயிரே,அருகில் நீ இல்லை''

 இப்படியாய் தொடர்கின்ற வரிகளில் நிறைந்திருந்தது சில கண்ணீர்த்துளியின் அடர்த்தி.அந்த வலிகளை உள்வாங்கி அவளுக்காய் சேர்ந்து அழுகிறேன்.இப்போது மழையும் கூட அழுகிறது.

 மழை இது வானத்தின் தூது.பூமியின் பிரசவம்.இடையில் அந்தரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறேன் இந்த பேருந்து பிரயாணம்.மழைப்பிரசங்கம் கேட்டபடி புனிதயாத்திரை ஒன்றில் ஊர்வலம் போவதாய் தோன்றுகிறது.கன்னியொருத்தி கன்னங்களில் பவ்வியமாய் ஒட்டிக்கொண்ட பருவப்பருக்கள் போல கண்ணாடி எங்கும் தண்ணீர்த்தூறல்கள்.அதில் அதில் அவசரமாய் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி.கலைக்கவும் மனமின்றி,காத்திருக்கவும் பொறுமையின்றி சலித்து கொள்கையில் பறந்துபோகிறது பட்டாம்பூச்சி.என் சுவாசம் சுட்டுவிட்டது போலும்.கூடவே பன்னீராய் தெறித்துப்போகிறது அதன் சிறகுத்துளிகள்.

மெல்லிசையாய் வானவில்லாய் சேர்த்து வைக்கிறேன் இந்த அனுபவத்தை.கைக்குட்டையில் கூட இன்னும் சிந்திக்கொண்டிருக்கிறது பணயத்தின் சாரல்கள்.

சொந்தங்களே மழைப்பயணங்களை ரசித்திருப்பீர்கள் ஏற்கனவே,இன்னொருமுறை இன்னுமொருமுறை அனுபவியுங்கள்.பருவங்கள் தங்த பரிசுகள் தான் கார்காலங்கள்.இதையும் சேர்த்தே காதலிப்போம்.

நேசங்களுடன்
அ-தி-ய-யா.





.


Saturday, November 2, 2013

இருதயத் தாள்கள் இப்படியாய்..!



என் முதல் எழுத்துக் குழந்தைகளை
பிரசவித்த பால்ய வயதின் எல்லைகளில்
மீண்டும் ஒரு முறை சீருடை அணிந்துகொள்கிறேன்.
எழுத்துக்கள் பருவமடையாத அந்தப் பராயங்களில்
நீல நோட்டொன்றின் நடுப்பகுதியிலும்
நாட்குறிப்பேட்டின் பிடரிகளிலும் நான் போட்ட விதைகள்;
இருட்டோடு உறங்கியிருந்தால்
இன்று சூன்யமாகவே முடிந்திருப்பேன்.
காலம் தந்த உஷ்ணத்தின் அகோரங்கள,;
கருக விட்டுவிடாத நேசத்தின் நீர்த்தூறல்கள்,
வலிந்து உள்ளெடுத்த சுவாசங்கள,;
இப்படித்தான் வேர்விட்டு விரல் 
நீட்டியது என் கவிதைப்பிள்ளை!



பால்யம் பருவமாய் திரண்ட காலங்களில்
உணர்வுக்கெஞ்சலும் அறிவுக்குழப்பமும்
முகம் திருப்பிய 
முரண்பட்டு பொழுதுகளிலெல்லாம்
ஷாத்வீகமாய் என் கவிதைக்குழந்தைகளை 
அணைந்து உறங்கியதுண்டு
அந்த நாள் வெறுமைகளின் கனத்தி;ற்கு -என் 
எழுத்துக்களின் அடர்த்தியே சாட்சி!

சபைகளை தனிமையாக்கி,தனிமைகளில் சபை விரித்து
நிலைமாற்றக்கொள்கைக்குள் என்னைவசியம் 
செய்ததும் சில எரியும் எழுத்துக்களே!
வார்த்தைகள் வசப்பட்ட சில பொழுதுகளில்
பெருமிதமாய் என் ராஜ்யத்தில் கொலு கொண்டிருக்கிறேன்.
அது சிம்மாசனமாய் இல்லாத போதும்
நானே செதுக்கிய நாற்காலி என்பதால் 
நிமிர்ந்தே உட்காந்திருக்கிறேன்.

இப்போதும் 
மயிலிறகுகளை பொறுக்கும் சிறு பையனைப்போல
சிதறவிட்ட காகிதங்களையெல்லாம்
பவ்வியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
தாள் தடவியபடியே கணக்குப்பார்க்கிறேன்-நான்
தாண்டி வந்த காட்டாறுகள் எத்தனை என்று..!

நேசங்களுடன்
அ-தி-ச-யா



Related Posts Plugin for WordPress, Blogger...